வளர்ச்சியும் பகிர்வு மேம்பாடும்

Wednesday, May 20, 2009

உலக வங்கியால் சமீபத்தில் வெளியிடப்பட்ட 2009-ம் ஆண்டுக்கான "உலக முன்னேற்ற அறிக்கை' என் வாசிப்பிற்குக் கிடைத்தது. அந்த அறிக்கையின் தலைப்பே வித்தியாசமாக இருந்தது. ""பொருளாதாரப் புவியியல் மறு உருவாக்கம்'' என்பதுதான் அந்த அறிக்கையின் தலைப்பு.

உலக வங்கியின் அந்த அறிக்கை ஒரு வித்தியாசமான செய்தியை நமக்குத் தருகிறது. அதாவது முன்னேற்றம் என்பது சுமுகமாக நடப்பது இல்லை. அது மிகப்பெரிய போராட்டத்தின் அடிப்படையில் வருவதாகும். பொருளாதார மேம்பாட்டுக்காக மக்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இழந்து இடம்விட்டு இடம் பெயர்ந்து கடின உழைப்பைத் தந்து செயல்படுகின்றனர். அதுமட்டுமல்ல, இந்தக் கடின உழைப்பு என்பது எல்லாப் பகுதிகளுக்கும் வருவது அல்ல. ஒரு சில இடங்கள் மட்டும் முன்னேற்றத் திட்டங்களைக் கவ்விப் பிடித்துக் கொள்கின்றன

நைஜீரியாவில் ஒன்பதாண்டு கல்வி பெற்று அமெரிக்காவில் பணியாற்றும் ஒருவன், நைஜீரியாவில் இருப்பவனைவிட எட்டுமடங்கு அதிகமாகச் சம்பாதிப்பான். எனவே உலகத்தில் நாம் எங்கே வாழ்கிறோம் என்பதில்தான் நம் வருமானம் அடங்கியுள்ளது. எனவே உலகத்தில் வருமானத்தை நிர்ணயம் செய்வது என்பது நமக்கு என்ன தகுதி, திறமை, யாரைத் தெரியும் என்பதைவிட எங்கு நாம் வேலை செய்கிறோம் என்பதில்தான் நிர்ணயம் செய்யப்படுகிறது.
தேசிய அளவில் பொருளாதார வளர்ச்சி என்பது சமமாக இல்லை. பிராந்தியங்கள், பகுதிகள், நகரங்கள் என்று எவையெல்லாம் சந்தைக்கு அருகில் இருக்கின்றனவோ, பொருள் உற்பத்தி செய்யும் இடங்களுக்கு அருகில் உள்ளனவோ அவையெல்லாம் மிகப்பெரிய வளர்ச்சியைப் பொருளாதார நிலையில் அடைய முடிகிறது. மற்ற பகுதிகள் மற்றும் பிராந்தியங்கள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. அரசியல்வாதிகள் இந்தப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நிராகரித்தபொழுதும் அவர்களால் இத்தகைய ஏற்றத்தாழ்வுகளை மாற்றியமைக்க முடியவில்லை. இந்த ஏற்றத்தாழ்வுகளுக்குத் தீர்வு காணவும் முடியவில்லை.

உலகத்தில் ஒரு பக்கம் எல்லையில்லா வளர்ச்சி, மறுபக்கத்தில் வறுமை, கல்வியறிவின்மை, சுகாதாரக் கேடுடன் வாழும் மக்கள். இந்தச் சூழல் இன்றைய வளர்ச்சிக்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது. இரண்டு நூற்றாண்டுகளில் பொருளாதாரச் செயல்பாடுகள் புவியியல் சார்ந்து வேற்றுமைகளை வருமானத்திலும், பொருள் உற்பத்தியிலும் கொண்டு வந்துவிட்டன. ஒரு தலைமுறை பொருளாதார மேம்பாட்டு ஆராய்ச்சியில் ஓர் உண்மையைக் கண்டுபிடித்துவிட்டது. அதாவது வளர்ந்த பொருளாதாரம் சுமுகமாக எல்லா இடங்களுக்கும் பரவிவிடும் என்று நாம் எதிர்பார்க்க இயலாது.

பெருகிவரும் மக்கள்தொகை அடர்த்தியைக் குறைப்பதும் நகர்ப்புறங்களுக்கு மக்கள் குடிபெயர்வதைத் தடுப்பதும் அடைந்த பொருளாதாரத்தை சீரான அளவில் பங்கிட்டு வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதும் தான் இன்றைய அரசாங்கத்தின் முக்கியக் கடமையாக இருக்க வேண்டும் என்பதைத்தான் உலக வங்கி அலசி ஆராய்ந்து தனது அறிக்கையின் முடிவாக வெளிப்படுத்தியுள்ளது. இதுதான் உலக யதார்த்தமும்கூட.

0 comments

Post a Comment